தாம்பரம், செப்.25: தாம்பரம் மாநகர திமுக சார்பில், திமுக பவள விழா ஆண்டு, திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்பி கலந்து கொண்டு பேசியதாவது:
பாஜ ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலை துறையில் ரூ.7 லட்சம் கோடி ஊழல் என சிஏஜி அறிக்கை சொல்கிறது. நான் அந்த துறையில் அமைச்சராக இருந்து, வெளியில் வந்து 15 வருடத்திற்கு மேலாகிறது. இதுவரைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு குறை சொல்ல முடியுமா. ரூ.7 லட்சம் கோடி ஊழல் என திராவிட முன்னேற்ற கழகமோ, அரசியல் கட்சிகளோ சொல்லவில்லை. அரசினுடைய பொதுவான குழு (சிஏஜி) சொல்கிறது. இப்படி ஒரு ஊழல் ஆட்சிக்கு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் முடிவுகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மண்டல தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜோதி குமார், சிட்லபாக்கம் சுரேஷ், கொடி தாமோதரன், ரமணி ஆதிமூலம், ராஜேஸ்வரி சங்கர், ஹேமாவதி சேகர், திமுக பேச்சாளர்கள் வேல்மணி, கருணாகரன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கார்த்திக், ராஜேஷ், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post ரூ.7 லட்சம் கோடி ஊழல் செய்துள்ள ஒன்றிய பாஜ ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்: டி.ஆர்.பாலு எம்.பி பேச்சு appeared first on Dinakaran.